தனிமையின் கதை - தி டோக்யோ ஸ்டோரி
எனக்கு எப்போதுமே பிடிக்காத விஷயம் தனிமை. சுற்றி யாராவது இருந்து கொண்டே இருப்பது எனக்குத் தேவையான ஒன்று. விடுமுறை தினங்களில் பிள்ளைகள் படித்துக் கொண்டு இருந்தால், எல்லோரும் ஒரே அறையில் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அவரவர் வேலையை செய்யலாம்.என்னோடு பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. பேசவும் தேவையில்லை. ஆனால் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கு ஒரு தனிமை தேவைப்படுகிறது. அவர்களுக்குப் பிடித்த இசை, புத்தகம், திரைப்படங்கள் என்று பார்க்க அவரவர்க்கான தனிமை தேவைப்படுகிறது. எனக்கும் என் பதின்ம வயதுகளில் தேவைப்பட்டு இருக்கும். ஆனால் ஒரு சக்கரம் போல நாம் விரும்பும் தனிமையும், நாம் விரும்பாத் தனிமையும் நம்மை சுற்றிக்கொண்டே இருக்கிறது. மனித வள மேம்பாட்டு அறிக்கைகளில் வயதானோர் தனிமையில் இருப்பதன் பிரச்சினைகள் குறித்து நிறைய குறியீடுகள் சொல்லப்படுகின்றன. வயது முதிர்ந்தோருக்கான மருத்துவ உதவிகள் தனித்து விடப்படும்போது அவர்களின் அவசர கால உதவிகளுக்கான வாய்ப்புகள், பிள்ளைகள் புலம் பெயர்ந்து போகும் நிலையில் முதியோரின் மன நிலை முதலிய விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந...